வெள்ளி, ஏப்ரல் 17, 2009

வன்முறைதான் என்ரை வழி

கேட்டன் பாருன்னைக் கிளுகிளுப்பாய் இல்லாமல்
மோட்டு வளைபார்த்து முறைக்கிறியே- பாட்டை விட்டு
வெள்ளை வாகனத்தில் விரைந்துன்னைக் கடத்தோணும்
கள்ளியே உன்மனத்தைக் கரை!!

கரையைத் தேடிவந்து கவிழ்ந்து தலைநின்றால்
இரையில் மொய்த்துவிடும் இலையான்கள்- அடிபோடி
மென்மை வெளிப்படுத்தல் விளங்காட்டில் இனிமேலும்
வன்முறைதான் என்ரை வழி!!

கடிதங்கள் எழுதிக் கனவினிலை மனுப்போட்டுத்
தடிமனாய்ப் போச்செனக்கு தலைவலியும்- வடிவழகி
எண்டுநினைப்போ? இரு,பாரன் பல்குழலில்
குண்டுகள் அடிப்பேன் குறி

அகதிபோல் ஓடி அடிவாங்கித் தெருநாயாய்ப்
பகலிலே வதைபட்ட பாடமிது- இனிமேலும்
கேட்டல் மறுத்தல் எனுங்கதைகள் கிடையாது
வேட்டொலி சொல்லும் விடை!!!

கி.குருபரன்.
17.04.2009

புதன், ஏப்ரல் 15, 2009

விடியலைத்தேடி......

ஏன் நடக்கிறது என்பது தெரியாமல்
இன்னமும் எதிர்பார்ததுக்கொண்டிருக்கும் மனது
இரைச்சல் போட்ட பறவைகளைக் கண்டு பயந்ததால்
இப்போது இனிய குயில் கூட 
இழவு சொல்வதைப்போலத்தான் உள்ளது.
தப்புச் செய்யாதவர்கள் ஏன் தண்டனை அனுபவிக்கிறார்கள்?
தமிழனாயப் பிறப்பது தப்பென்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் கொண்டாடுங்கள்
அவர்கள் தலையில் இரத்தம் வடிந்தால் என்ன?
நாங்கள் மருத்து நீரை தலையில் வைப்போம்.
நீங்கள் புதுத் துணிகளை கேட்டால் 
வாங்கியனுப்பியிருப்பேன்.
மன்னியுங்கள்
காயத்துக்கு கட்டுப்போடும் துணி
என்னிடம் கைவசம் இல்லை.

நல்லநேரம் எது எனக் கேட்டால் 
தலையில் குண்டுவிழாத நேரம்
என்று நீ சொல்லலாம்.
பொறுத்திரு
நாங்களும் கைவிசேசம் மாறிக்கொள்வோம்.

வீடெல்லாம் செத்தவீடென்றால்
யாருக்கு விருந்து வைப்பது?
நானும் பிரார்த்திக்கின்றேன்
இறந்து போனவல்கள் எழும்பாவிட்டாலும்
இனியாவது நீ இறக்கக் கூடாதென்று

நானும் மாறிவிட்டேன்
எல்லோரையும்போல
எப்போது நல்லநேரம் எனப்
பஞ்சாங்கத்தைப் பார்த்தபடி.

கடவுளே
இனியாவது கண்ணைத்திற.


நல்லவனாய் நானிருந்து............


கட்டழகுப் பெண்பதுமை கடைவீதி வலம்வந்தால் 
தொட்டவளைப்பேசிடவே தூண்டல் வரும் - அப்பிடியோ
என்வீட்டாள் இதைக்கேட்டால் என்னாகும்? உடனடியாய்க்
கொன்றிடுவாள் என்னைக் கொளுத்தி!

ஆரோடும் கதைச்சான் அதைச்சொன்னான் இதைச்சொன்னான்
தேரோடும் வீதியிலும் திரிஞ்சான் -கூறோணும்
கேட்டவளோ வறுப்பாள் கீழ்நெருப் பெரியவைத்து
காட்டுங்கடா என்மேல் கருணை!

ஆருக்கும் தெரியாமல் அன்றைக்கு நாம்பார்த்த
கோதாரி சகிலாவின் குறையுடுப்பை – போய்நாறி
இந்தக் கதையெல்லாம் இவளுக்குச் சொன்னாயேல்
கந்தகம் புகையும் கறுப்பு!

சத்தம்போட்டு அழுது சண்டை பிடித்தாளேல்
மெத்தவும் நான் மகிழ்ந்து மீண்டிடுவேன் - அதைவிடுத்து
முத்த நிறுத்தம் முறுவல் தவிர்ப்பென்றால்
செத்திடுவேன், வையும் சிலை!

21.01.2009

புத்தாண்டு எதிர்பார்ப்பு

கனவுகள் எப்போது பலிக்கும் - உன்
கருணையின் மணியெப்ப ஒலிக்கும்
விடிவுகள் எப்போது கிடைக்கும் - அதன்
விளைவுகள் எப்போது நடக்கும்?

அழுகைகள் எப்போது அடங்கும்? - உன்
அருளது எப்போது தொடங்கும்?
தொழுகையின் பலனது கிடைக்கும் - உன்
தொலைவுகள் எப்போது நெருங்கும்?

அமைதிக்கு எங்கேதான் இடமோ- தமிழ்
ஆட்களின் மேலென்ன விசமோ?
சிலைவைத்து வணங்குதல் பிழையோ- நீ
சிறையெனும் செய்தியை அறியோம்!!!

ஆண்டவா கண்திறந்தாடு- இல்லை
ஆள்பவர் பேயெனச் சாடு
வேண்டினால் வேண்டுதல் தருவாய்- தமிழை
விரும்புவாய் காத்திடு குருவாய்!!!

14.04.2009